வல்லநாடு அருகே, லோடு ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்; சிறுமி பலி - தாத்தா, பாட்டி உள்பட 3 பேர் படுகாயம்


வல்லநாடு அருகே, லோடு ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்; சிறுமி பலி - தாத்தா, பாட்டி உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 22 March 2019 10:59 PM GMT (Updated: 22 March 2019 10:59 PM GMT)

வல்லநாடு அருகே லோடு ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிறுமி பலியானார். தாத்தா, பாட்டி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஸ்ரீவைகுண்டம், 

ஸ்ரீவைகுண்டம் அருகே பேரூரை அடுத்த சாமியாத்து கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் முத்து புவனா (வயது 7), புஷ்ப சந்தியா (5) ஆகிய 2 மகள்கள். அங்குள்ள பள்ளிக்கூடத்தில் முத்து புவனா 2-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, சண்முகசுந்தரத்தின் தந்தை முத்தையா, தாயார் புவனேசுவரி ஆகிய 2 பேரும் தங்களுடைய பேத்திகளான முத்து புவனா, புஷ்ப சந்தியா ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வல்லநாடு அருகே மறுகால்தலையில் உள்ள கோவிலுக்கு சென்றனர். பின்னர் மாலையில் அவர்கள் அங்கிருந்து தங்களது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

வல்லநாடு அருகே பூவாணி-தெய்வசெயல்புரம் ரோட்டில் சென்றபோது, எதிரே வந்த லோடு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முத்து புவனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முத்தையா, புவனேசுவரி, புஷ்ப சந்தியா ஆகிய 3 பேரும் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த முத்தையா உள்ளிட்ட 3 பேரையும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் இறந்த முத்து புவனாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story