தாராபுரம் அருகே மரத்தில் கார் மோதியதில் பொள்ளாச்சியை சேர்ந்தவர் சாவு உடுமலை அரசு ஊழியர் படுகாயம்


தாராபுரம் அருகே மரத்தில் கார் மோதியதில் பொள்ளாச்சியை சேர்ந்தவர் சாவு உடுமலை அரசு ஊழியர் படுகாயம்
x
தினத்தந்தி 24 March 2019 9:45 PM GMT (Updated: 24 March 2019 7:55 PM GMT)

தாராபுரம் அருகே மரத்தில் கார் மோதியதில் பொள்ளாச்சியை சேர்ந்தவர் பலியானார். இந்த விபத்தில் உடுமலையை சேர்ந்த அரசு ஊழியர் படுகாயம் அடைந்தார்.

தாராபுரம்,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டி கொள்ளுப்பாளையத்தைச் சேர்ந்தவர் வஞ்சிமுத்து (வயது 42). தாராபுரம் எல்லீஸ் நகரை சேர்ந்தவர் நாகராஜ் (42). இவர்கள் இருவரும் நண்பர்கள். நாகராஜ் உடுமலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். வாரம் ஒருமுறை தாராபுரத்தில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் தனது நண்பரை பார்ப்பதற்காக வஞ்சிமுத்து நேற்று உடுமலைக்கு காரில் வந்தார். அங்கு நாகராஜை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் சேர்ந்து காரில் தாராபுரம் வந்தனர். காரை நாகராஜன் ஓட்டி வந்துள்ளார்.

தாராபுரம்–உடுமலை சாலையில் சென்னாக்கல்பாளையம் அருகே வந்த போது, அந்த வழியாக பக்கவாட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர், நாகராஜ் ஓட்டி வந்த காருக்கு குறுக்கே வந்துள்ளார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நாகராஜ் மோட்டார் சைக்கிளில் மோதிவிடக்கூடாது என்பதற்காக காரை சாலையிலிருந்து கீழே இறக்கினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோரம் இருந்த மரத்த்ன் மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் முன்பகுதியில் அமர்ந்திருந்த வஞ்சிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நாகராஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகே இருந்தவர்கள் நாகராஜை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story