பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்


பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்
x
தினத்தந்தி 26 March 2019 10:45 PM GMT (Updated: 26 March 2019 8:25 PM GMT)

பெரம்பலூர் நாடாளு மன்ற தொகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

பெரம்பலூர்,

இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்ற தேர்தல் 2019-ன் தேர்தல் அட்டவணை கடந்த 10-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து வருகிற மே மாதம் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. மேலும் இந்திய தேர்தல் ஆணையம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தேர்தல் 2019-ஐ முன்னிட்டு வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் செலவுகளை கண்காணிக்க பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர், லால்குடி, மண்ணச்சநல்லூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக துக்ரியாவும், துறையூர், முசிறி, குளித்தலை ஆகிய 3 தொகுதிகளுக்கு நீரஜ் சாய்யும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தால் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் பொதுபார்வையாளராக மஞ்சுநாத் பஜன்ட்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில், தேர்தல் தொடர்பான புகார்களை தினந்தோறும் காலை 10 மணி முதல் பகல் 11 மணி வரை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் பொதுபார்வையாளர் மஞ்சுநாத் பஜன்ட்ரிடம் நேரில் அளிக்கலாம். மேலும் தேர்தல் தொடர்பாக தொலைபேசி வாயிலாக 9092843476 என்ற எண்ணிலும், 04328 225531 என்ற எண்ணிலும், ge-n-o-bs-p-b-lr@gm-a-il.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடி என கண்டறியப்பட்டுள்ள துறைமங்கலம் டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளி மற்றும் ரோவர் மேல்நிலைப்பள்ளி, நெருக்கடியான வாக்குச்சாவடி என கண்டறியப்பட்டுள்ள செங்குணம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் அமையவுள்ள வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் பொதுபார்வையாளர் மஞ்சுநாத் பஜன்ட்ரி நேற்று நேரில் பார்வையிட்டார். மேலும் இந்த நிகழ்வின் போது அங்கிருந்த பொதுமக்களிடம் தேர்தல் தொடர்பாக நெருக்கடி மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தொடர்பான புகார்களை என்னிடம் தெரிவிக்கலாம் என்று கூறினார். 

Next Story