அரசு அலுவலக வளாகங்களில் விளம்பரங்கள் செய்யக்கூடாது மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி பேச்சு


அரசு அலுவலக வளாகங்களில் விளம்பரங்கள் செய்யக்கூடாது மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி பேச்சு
x
தினத்தந்தி 29 March 2019 10:45 PM GMT (Updated: 29 March 2019 9:49 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலக வளாகங்களில் எந்த விளம்பரங்களும் செய்யக்கூடாது என்று மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி கூறினார்.

புதுக்கோட்டை, 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு விளம்பரம் செய்தல் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது;-

தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில் சினிமா தொடர்பான சுவர் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் போன்ற விளம்பரங்களை, திரையரங்க வளாகத்திற்கு உள்ளே பொதுமக்கள் பார்வையில் படும்படி விளம்பரம் செய்து கொள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலக வளாகங்களில் சுவர் விளம்பரம், சுவரொட்டிகள், காகிதம் ஒட்டுதல் உள்ளிட்ட எந்த வகையான விளம்பரங்களும் கட்டாயம் செய்யக்கூடாது. தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு பொது மற்றும் தனியார் இடங்களில் சுவர் விளம்பரங்கள், பதாகைகள் போன்றவை அனுமதியின்றி வைக்கப்படுவதை கண்காணித்து உடனுக்குடன் அகற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிவக்குமாரி, தேர்தல் தாசில்தார் திருமலை, மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் கண்ணாகருப்பையா உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story