நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு; இலங்கை கடற்படை அத்துமீறல்


நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு; இலங்கை கடற்படை அத்துமீறல்
x
தினத்தந்தி 9 April 2019 10:09 PM GMT (Updated: 9 April 2019 10:09 PM GMT)

நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 562 படகுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அந்த வழியாக குட்டி கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கண்டதும் அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர்.

இதையடுத்து மீனவர்கள் கடலில் வீசியிருந்த வலைகளை எடுத்துக்கொண்டு வேகமாக கரை திரும்ப முயன்றனர். ஆனால் அதற்குள் ஒரு சில படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை அத்துமீறி தாக்கியதுடன் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் தங்கச்சிமடம் அந்தோணியார்புரத்தை சேர்ந்த அமலன் என்பவருக்கு சொந்தமான ஒரு படகையும், அதில் இருந்த மீனவர்கள் ரெனிஸ்டன் (வயது 40), முருகேசன் (48), முனியசாமி (55), சுப்பையா (65) ஆகிய 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் 4 பேரும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Next Story