புதுக்கடை அருகே அம்மன் கோவிலில் நகை-பணம் கொள்ளை


புதுக்கடை அருகே அம்மன் கோவிலில் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 11 April 2019 10:15 PM GMT (Updated: 11 April 2019 9:05 PM GMT)

புதுக்கடை அருகே அம்மன் கோவிலில் கதவை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதுக்கடை,

புதுக்கடை அருகே செட்டியார்வளாகம், பணங்காலமுக்கு பகுதியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலை, மாலை நேரங்களில் பூஜைகள் நடைபெறும். இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.

சம்பவத்தன்று இரவு பூஜைகள் முடிந்த பின்பு பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலையில் பூஜைகள் செய்வதற்காக கோவிலுக்கு பூசாரி வந்தார். அப்போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது, பூஜை பொருட்கள் சிதறி கிடந்தன. அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க தாலிகள் மாயமாகி இருந்தன. மேலும், உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணமும் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது.

இரவு மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து நகை- பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து புதுக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோவிலில் பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story