22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் அவினாசியில் வைகோ பேச்சு


22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் அவினாசியில் வைகோ பேச்சு
x
தினத்தந்தி 12 April 2019 11:15 PM GMT (Updated: 12 April 2019 11:15 PM GMT)

தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று அவினாசியில் நடந்த பிரசார கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.

திருப்பூர்,

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவுக்கு ஆதரவு கேட்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவினாசி மேற்கு ரத வீதியில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:–

தமிழக மக்களின் வாழ்வாதாரத்துக்காக கடந்த 55 ஆண்டுகாலத்தில் பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்துள்ளேன். மது ஒழிப்புக்காக 5 ஆயிரம் கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். தற்போது மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பல வழிகளில் தமிழகத்தை மோடி வஞ்சித்து வருகிறார். நீதிபதிகளாக இருக்கும் நீங்கள் வருகிற 18–ந் தேதி தீர்ப்பளிக்க வேண்டிய காலம் வந்துள்ளது. நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் டாக்டர் கனவு தகர்ந்து போய்விட்டது. அதனால் தான் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று கூறி வருகிறார்கள்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். ராகுல்காந்தியும் நீட் தேர்வு ரத்து செய்ய அறிவித்துள்ளார். விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. வின் தேர்தல் அறிக்கையை ஒத்துப்பார்த்து காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை அறிவித்துள்ளது. 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். கண்டிப்பாக நீட் தேர்வு நிச்சயம் ரத்து செய்யப்படும்.

உலக அளவில் தமிழ் முதல் மொழி, தமிழ் பண்பாடு சிறந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழியை ஆய்வு செய்த அமெரிக்கா, 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நின்று திராவிடர்கள் குரல் கொடுத்தனர். இதனால் பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டத்தினர், மீத்தேன், கெயில் எரிவாயு போன்ற திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்தை அழித்து வருகிறார்கள்.

இந்தியாவில் நீரவ் மோடி, விஜய் மல்லையா உள்பட 23 பேர் ரூ.90 ஆயிரம் கோடி வங்கிக்கடன் பெற்று வெளிநாட்டுக்கு பறந்து விட்டனர். இதில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. தமிழகத்தில் குட்கா ஊழல், பருப்பு ஊழல், ஆம்னி பஸ் ஊழல், கல்வித்துறை ஊழல், துணைவேந்தர் நியமன ஊழல் என ஊழல் குற்றச்சாட்டு நிறைந்த ஆட்சி நடந்து வருகிறது.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் காவல்துறையில் உள்ள சிலரை ஏவி அப்பாவி மக்கள் 13 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இது திட்டமிட்ட படுகொலை என்று போலீஸ் உயர் அதிகாரிகளைக்கொண்ட விசாரணை குழு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் சம்பவத்தில் உயிரிழந்த அப்பாவி மக்களின் ரத்த துளிகளுக்கு நீதி கிடைக்க நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story