முறைகேடு பற்றிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன எடியூரப்பாவின் டைரி குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் தினேஷ் குண்டுராவ் வலியுறுத்தல்
எடியூரப்பாவின் டைரி குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதில் முறைகேடு பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் தினேஷ் குண்டுராவ் வலியுறுத்தினார்.
பெங்களூரு,
எடியூரப்பாவின் டைரி குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதில் முறைகேடு பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் தினேஷ் குண்டுராவ் வலியுறுத்தினார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எடியூரப்பாவின் முறைகேடுகள்
எடியூரப்பா மற்றும் ஈசுவரப்பா ஆகியோர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, எடியூரப்பாவின் முறைகேடுகள் பகிரங்கமாகி வருகிறது. எடியூரப்பா எழுதிய டைரியை ஈசுவரப்பாவின் உதவியாளர், நகர போலீஸ் கமிஷனரிடம் வழங்கியுள்ளார். இது தீவிரமான விஷயம். இதுபற்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.
போலீசாரிடம் உள்ள அந்த டைரியில், எடியூரப்பாவின் முறைகேடுகள் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?. எதிர்க்கட்சிகளை பா.ஜனதா அழிக்க முயற்சி செய்கிறது.
ஆதரவு அளிக்கவில்லை
சில ஊடகங்களை பா.ஜனதாவினர் தவறாக பயன்படுத்துகிறார்கள். லிங்காயத்துக்கு தனி மதம் வழங்க கோரி நடந்த போராட்டங்கள் தொடர்பாக மந்திரி எம்.பி.பட்டீல், சோனியா காந்திக்கு எழுதியதாக வெளியாகியுள்ள கடிதம் போலியானது. அந்த போராட்டத்திற்கு சோனியா காந்தி ஆதரவு அளிக்கவில்லை.
இவ்வாறு போலியான கடிதத்தை உருவாக்கி தேர்தலில் ஆதாயம் பெற முடியும் என்று பா.ஜனதா நம்புகிறது. இது தவறு. இந்த விஷயத்தில் எடியூரப்பா மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த போலி கடிதத்தை வெளியிட்ட பத்திரிகை மற்றும் பா.ஜனதா தலைவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்ய மந்திரி எம்.பி.பட்டீல் முடிவு செய்துள்ளார்.
தேர்தல் அதிகாரியிடம் புகார்
மோடிக்கு ஆதரவாக வாக்களிக்காதவர்கள், தாய்-கணவர் என்பதற்கு சமம் என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறியுள்ளார். இது அவரது மோசமான நிலையை எடுத்துக் காட்டுகிறது. இந்த விஷயத்தில் சி.டி.ரவிக்கு எதிராக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிப்போம்.
இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.
Related Tags :
Next Story