திருக்கோவிலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


திருக்கோவிலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 April 2019 10:15 PM GMT (Updated: 20 April 2019 5:16 PM GMT)

திருக்கோவிலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார். விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள ஜா.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரன். இவரது மனைவி இருசம்மாள் (வயது 70). இவர் அதே பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, இருசம்மாள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இருசம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்ய வலியுறுத்தி ஜா. சித்தாமூர் கூட்டுரோட்டில் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்து வந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட ஜா.சித்தாமூரை சேர்ந்த தேவராஜ் உள்ளிட்ட 50 பேர் மீது மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிள் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிறுபனையூர் கிராமத்தை சேர்ந்த ஷபி(20) என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story