தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மூலம் என்ஜினீயரிங், கலைக்கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் கல்வித்துறை அதிகாரிகள் தகவல்
![தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மூலம் என்ஜினீயரிங், கலைக்கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மூலம் என்ஜினீயரிங், கலைக்கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் கல்வித்துறை அதிகாரிகள் தகவல்](https://img.dailythanthi.com/Articles/2019/Apr/201904210137475533_By-temporary-score-certificateEngineering-can-apply-for_SECVPF.gif)
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மூலம் என்ஜினீயரிங், கலைக் கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திண்டுக்கல்,
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், வத்தலக் குண்டு ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என மொத்தம் 197 பள்ளிகளை சேர்ந்த 22 ஆயிரத்து 71 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 9 ஆயிரத்து 296 மாணவர்கள், 10 ஆயிரத்து 743 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 39 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் என்ஜினீயரிங், கலைக்கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் மதிப்பெண் சான்றிதழ் இல்லாமல் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்கப்பட இருக்கிறது. மாணவ-மாணவிகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை அணுகினால் அவர்கள், இணையதளத்தில் இருந்து மாணவ-மாணவிகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொடுப்பார்கள்.
அதனை பயன்படுத்தி என்ஜினீயரிங், கலைக்கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்த பள்ளிகளில் மாணவ-மாணவிகள் பெற்றுக்கொள்ளலாம். மேலும் மதிப்பெண் மறுமதிப்பீடு செய்ய விரும்புபவர்களும் இந்த சான்றிதழை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story