குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 25 April 2019 9:30 PM GMT (Updated: 25 April 2019 8:48 PM GMT)

குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை யிட்டனர்.

இளம்பிள்ளை, 

மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கூடலூர் ஊராட்சி கரையேறிப்பள்ளம் என்ற கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வசிப்பவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீரை சேமித்து வைத்து வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். எனவே குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் குடிநீர் வினியோகம் செய்ய வில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று காலை குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கரையேறிப்பள்ளம் கிராம மக்கள் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். மனு வை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி, குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Next Story