மயக்க பிஸ்கட் கொடுத்து ரெயில் பயணிகளிடம் கொள்ளையடித்த பெண், கள்ளக்காதலன் கைது


மயக்க பிஸ்கட் கொடுத்து ரெயில் பயணிகளிடம் கொள்ளையடித்த பெண், கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 28 April 2019 10:21 PM GMT (Updated: 28 April 2019 10:21 PM GMT)

மயக்க பிஸ்கட் கொடுத்து ரெயில் பயணிகளிடம் கொள்ளையடித்த பெண் மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

அம்பர்நாத்,

தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்த பெண் ஒருவர் சம்பவத்தன்று இரவு கல்யாண் ரெயில்நிலைய பிளாட்பாரத்தில் ரெயிலுக்காக காத்து நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்தார். அவர், பெண் பயணியிடம் பேசி நட்பானார்.

இந்தநிலையில் அடுத்த நாள் மீண்டும் 2 பேரும் கல்யாண் ரெயில்நிலையத்தில் சந்தித்தனர். அப்போது அந்த பெண், பெண் பயணிக்கு பிஸ்கட் கொடுத்தார். அதை சாப்பிட்ட உடன் பெண் பயணிக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை ரெயிலில் கோபர் ரெயில்நிலையத்துக்கு அழைத்து சென்ற அந்த பெண், அங்கு தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெண் பயணியின் செல்போன், பணம், ஏ.டி.எம். கார்டை பறித்து சென்றார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பயணி ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து 30 வயது பெண்ணையும், கள்ளக்காதலனையும் தேடி வந்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பெண் பயணியிடம் மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளையடித்தது திவாவை சேர்ந்த சரளா மற்றும் அவரது கள்ளக்காதலன் நதீம் அப்பாஸ் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் ரெயில் நிலையத்தில் தனியாக நிற்கும் பயணிகளிடம் பேச்சு கொடுத்து நட்பாகி பின்னர் மயக்க பிஸ்கட் கொடுத்து அவர்களிடம் கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.

Next Story