கணவரை கொன்று உடலை தூக்கில் தொங்க விட்ட பெண் கள்ளக்காதலனுடன் தலைமறைவு


கணவரை கொன்று உடலை தூக்கில் தொங்க விட்ட பெண் கள்ளக்காதலனுடன் தலைமறைவு
x
தினத்தந்தி 28 April 2019 10:33 PM GMT (Updated: 28 April 2019 10:33 PM GMT)

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று உடலை தூக்கில் தொங்க விட்ட பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வசாய்,

பால்கர் மாவட்டம் மோக்டா பகுதியை சேர்ந்தவர் வினோத் பவார். இவர் சம்பவத்தன்று அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வினோத் பவாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவரது மனைவி தாரா (வயது22) தலைமறைவானது தெரியவந்தது.

இதனால் வினோத் பவாரின் சாவில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கீழ்க்கண்ட தகவல்கள் தெரியவந்தது.

தாராவிற்கு அந்தபகுதியை சேர்ந்த ராவ்ஜி என்பவருடன் கள்ளக்காதல் இருந்து வந்தது. இவர்களின் கள்ளத்தொடர்பு பற்றி அறிந்த வினோத் பவார் மனைவியை கண்டித்து உள்ளார். இதனால் அவரது மனைவி தாரா கணவரை தீர்த்துக் கட்ட திட்டமிட்டார்.

அதன்படி சம்பவத்தன்று அவர் தனது கள்ளக்காதலன் ராவ்ஜியுடன் சேர்ந்து வினோத் பவாரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் உடலை அங்குள்ள மரத்தில் தூக்கில் தொங்க விட்டு விட்டு தலைமறைவானது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தாரா மற்றும் அவரது கள்ளக்காதலன் ராவ்ஜியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story