நல்ல முறையில் கல்வி கற்றால் மாணவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும் - கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு


நல்ல முறையில் கல்வி கற்றால் மாணவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும் - கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு
x
தினத்தந்தி 28 April 2019 10:15 PM GMT (Updated: 28 April 2019 11:42 PM GMT)

நல்ல முறையில் கல்வி கற்றால் மாணவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் தாலுகா வாதலக்கரை கிராமத்தில் முத்துசாமி இந்து தொடக்கப்பள்ளியில் 125-வது ஆண்டு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார்.

தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட பள்ளி கட்டி டத்தை கலெக்டர் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

அப்போது, கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-

இந்த கிராமத்தில் உள்ள மாணவ-மாணவிகள் கல்வி அறிவு பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு இங்கு 125-வது ஆண்டுகளுக்கு முன்பாக இந்த பள்ளி திறந்து வைக்கப்பட்டது.

125 ஆண்டுகளுக்கு முன்பாக தேவையான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் இந்த பள்ளியில் பல்வேறு பகுதியில் உள்ள மாணவர்கள் கல்வி படித்து தற்போது வாழ்வில் நல்ல நிலையில் உள்ளனர்.

இந்த கிராமத்தில் உள்ள மாணவ-மாணவிகள் 100 சதவீதம் கல்வியறிவு பெற வேண்டும். மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் அடிப்படையான கல்வியை நல்ல முறையில் கற்று கொள்ள வேண்டும். மேலும், மாணவ-மாணவிகள் நல்ல முறையில் கல்வி கற்றால் தங்களது வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும். இந்த பள்ளியின் 150-வது ஆண்டு விழாவின்போது இந்த பள்ளியை தரம் உயர்த்தி உயர்நிலைப்பள்ளியாக மாற்ற பள்ளி நிர்வாக கமிட்டியினர் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கேசவன், பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு தலைவர் முருகபூபதி, வ.உ.சி. வாரிசு வ.சிதம்பரம், மகாகவி பாரதியாரின் கொள்ளு பேரன் நிரஞ்சன் பாரதி, நேதாஜி இயக்க தலைவர் சுவாமிநாதன், நேஷனல் பொறியியல் கல்லூரி முதல்வர் சண்முகவேல், பள்ளி தலைமை ஆசிரியை கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story