ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக நிலங்களை வாங்கிவிட்டால் விவசாயிகள் பஞ்சம் பிழைக்க எங்கே செல்வார்கள்? வைகோ ஆவேச பேச்சு


ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக நிலங்களை வாங்கிவிட்டால் விவசாயிகள் பஞ்சம் பிழைக்க எங்கே செல்வார்கள்? வைகோ ஆவேச பேச்சு
x
தினத்தந்தி 13 May 2019 11:15 PM GMT (Updated: 13 May 2019 6:45 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக நிலங்களை வாங்கி விட்டால், விவசாயிகள் எங்கே பஞ்சம் பிழைக்க செல்வார்கள்? என அரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ ஆவேசமாக பேசினார்.

க.பரமத்தி,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக வி.செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தென்னிலை, க.பரமத்தி, பவுத்திரம், நொய்யல், புன்னம், வேலாயுதம்பாளையம் ஆகிய இடங்களில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ திறந்தவேனில் நின்றபடி மக்களிடையே வாக்கு கேட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மே 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கையின் போது 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் படிப்பு, மருத்துவ செலவு உள்ளிட்டவற்றுக்காக பணம் புரட்ட முடியாத நிலையில் தங்களது நகைகளை அடமானம் வைத்து பெண்கள் பலர் கடன் வாங்குகிறார்கள். பின்னர் அதனை திருப்ப முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தான், 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, நகை மீட்டு கொடுக்கப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த வாக்குறுதி தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. நம்மை பற்றி கவலைப்பட ஒரு தலைவர் இருக்கிறார் என்றால், அவர் தான் ஸ்டாலின் என தாய்மார்கள் எண்ணுகிறார்கள். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அது நிறைவேற்றப்படும்.

கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் உயர்மின்னழுத்த கோபுரம் மூலம் மின்கம்பிகளை கொண்டு செல்லும் திட்டத்தால் சிறு-குறு நடுத்தர விவசாயிகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி அவர்களது வாழ்வாதாரம் அடியோடு அழிய வாய்ப்பிருக்கிறது. தொழிற்சாலைகள் பல மூடப்பட்டு 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பினால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதற்கு நரேந்திர மோடி அரசு தான் காரணம் ஆகும்.

அத்தகைய மக்கள் விரோத அரசு தேர்தலுக்கு பிறகு அப்புறப்படுத்தப்படும். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் விழுப்புரம், புதுகை உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என முனைப்பு காட்டுகின்றனர். அந்த திட்டத்துக்காக அதானி, அம்பானி, ஸ்டெர்லைட் கம்பெனிக்காரர்கள் விவசாயிகளின் நிலங்களையெல்லாம் விலைக்கு வாங்குவார்கள். வேறு வழியின்றி விவசாயிகள் விற்க வேண்டிய சூழல் வரும். அதன்பின்னர் அவர்கள் பஞ்சம் பிழைக்க எங்கே செல்வார்கள்?. விவசாயிகளுக்கு வருமானமில்லாமல் போகும்.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எரிவாயு எடுக்கும் திட்டங்களால் லட்சக்கணக்கான கோடி ரூபாய் இந்திய அரசுக்கு கிடைக்கும். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கிடைக்கும். இது ஒரு வஞ்சகமான திட்டம். தமிழகத்தை அழிப்பதற்காக மத்திய அரசு சதி செயலில் ஈடுபடுவதை தான் இது காட்டுகிறது. மேகதாதுவில் அணை கட்டி காவிரியில் தண்ணீரை வர விடாமல் தடுக்கவும் முயற்சி எடுத்து வருகிறார்கள். இதனால் தஞ்சை உள்பட காவிரி டெல்டா பகுதி பஞ்ச பிரதேசமாக மாறும்.

இதை எதிர்த்து குரல் கொடுப்பதற்கோ, தடுப்பதற்கோ வழியின்றி ஊழல் புதைமணலில் எடப்பாடி பழனிசாமி அரசு சிக்கியுள்ளது. குட்கா ஊழல், பஸ் வாங்குவதில் ஊழல், பொதுப்பணித்துறை டெண்டர் ஊழல், உள்ளாட்சித்துறையில் ஊழல் உள்ளிட்ட ஊழல்களை குறிப்பிட்டு சொல்லலாம். இதன் காரணமாகவே பல வெளிநாட்டு கம்பெனிகள் இங்கு தொழிற்சாலைகள் ஆரம்பிப்பதற்காக வந்து விட்டு, இதனையறிந்ததும் பதறி அடித்து கொண்டு வேறு இடங்களுக்கு ஓடிவிட்டனர். மொத்தத்தில் தமிழகம் இன்று நாசமாகி கொண்டிருக்கிறது. இதிலிருந்தெல்லாம் தமிழகம் மீட்கப்பட வேண்டும் எனில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மட்டுமே முடியும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

நமது குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. நீட் தேர்வு மூலம் அவர்களது வாழ்வையே சூறையாடிவிட்டனர். பிளஸ்-2-வில் எவ்வளவு மதிப்பெண் எடுத்தாலும், நீட் தேர்வில் தேர்ச்சியடையவில்லை எனில் டாக்டராக முடியாது என்கிற நிர்பந்தத்தை ஏற்படுத்தி விட்டார்கள். நீட் ரத்து குறித்து ஒப்புக்காக அ.தி.மு.க. பேசினாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையொட்டி தான் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் நீட் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது.

எனவே மக்களாகிய நீங்கள் தருகிற வாக்கு என்பது உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக உதய சூரியனுக்கு தருகிற வாக்காக இருக்க வேண்டும். அது உழவர்களின் கண்ணீரை துடைப்பதாக இருக்க வேண்டும். வியாபாரிகளின் கவலையை போக்குவதாக இருக்க வேண்டும். அந்த வகையில் வி.செந்தில்பாலாஜிக்கு வாக்களித்து ஆதரவு கொடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

அரவக்குறிச்சியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைப்பது, புகளூரில் தடுப்பணை அமைப்பது, புகளூர் பேரூராட்சியை நகராட்சியாக மாற்றுவது, 25 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு 3 சென்ட் நிலம் வழங்குவது உள்ளிட்ட மக்களின் தேவைகள் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றி தரப்படும்.

காவிரி கரையோரமாக உள்ள 57 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க கேட்டிருந்தோம். ஆனால் பெட்ரோலிய, ரசாயன பொருட்களுடைய முதலீட்டு மண்டலமாக அறிவிக்க 2017-ம் ஆண்டு எடப்பாடி அரசு அனுமதித்தது. இதைவிட பச்சை துரோகம் எதுவும் இருக்க முடியாது. நரேந்திரமோடி வரம்புமீறி தகுதியை குறைத்து கொண்டு பேசி வருகிறார். நான் அதையெல்லாம் விளக்கமாக எடுத்து சொல்ல காலஅவகாசம் இல்லை யென்றாலும், ஒரு ரத்தக்களறியை ஏற்படுத்துகிற விதத்திலே அவர் பேசியதை சொல்லியாகவேண்டும். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என எல்லோரும் அண்ணன்-தம்பிகளாய் ஒற்றுமையாய் வாழ்கிற இந்த சமூகத்தின் நல்லிணக்கத்தை பாழ்படுத்துகிற விதத்தில் பேசுகிற நரேந்திரமோடி அரசானது, விவசாயிகள் அரசு அல்ல. மோடி பிரதமர் பொறுப்பேற்ற பிறகு அதனை அவரிடமே சொன்னேன். விவசாயிகளுக்கு வாழ்வளிப்பவராக நீங்கள் இருப்பீர்கள் என கருதினார்கள். ஆனால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஏஜெண்டாக நீங்கள் மாறிவிட்டீர்கள் என அவரது முகத்துக்கு நேராக சொன்னேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி, ம.தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கபினி சிதம்பரம் உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். 

Next Story