ரங்கனத்திட்டு பறவைகள் சரணாலயத்தில் படகு சவாரி மீண்டும் தொடங்கியது


ரங்கனத்திட்டு பறவைகள் சரணாலயத்தில் படகு சவாரி மீண்டும் தொடங்கியது
x
தினத்தந்தி 18 May 2019 9:30 PM GMT (Updated: 18 May 2019 5:18 PM GMT)

ரங்கனத்திட்டு பறவைகள் சரணாலயத்தில் படகு சவாரி மீண்டும் தொடங்கியது.

மண்டியா,

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது ரங்கனத்திட்டு பறவைகள் சரணாலயம் பகுதி. இந்தப்பகுதி 6 குட்டி தீவுகள் அடங்கிய பகுதியாகும். இந்த பகுதி அரிய வகை மற்றும் அழிந்து வரும் பறவைகளின் சொர்க்கபுரியாகவும், அவைகள் இனவிருத்தியில் ஈடுபடும் இடமாகவும் விளங்குகிறது.

ஒவ்வொரு வருடமும் சுமார் 4 லட்சம் சுற்றுலா பயணிகள் இந்த பகுதிக்கு வந்து செல்கிறார்கள். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் சென்று பறவைகளை பார்வையிட வசதியாக படகு சவாரியும் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி பல்வேறு சிறப்புமிக்க ரங்கனத்திட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக தேனீக்களின் தொல்லை அதிக அளவில் இருந்து வருகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு 12 பேர் அடங்கிய ஒரு குடும்பத்தினர் இங்கு சுற்றுலா வந்தபோது அவர்களை அந்த தேனீக்கள் பயங்கரமாக கொட்டி காயப்படுத்தின.

அந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த 4 நாட்களாக இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் அங்குள்ள தேனீக்களை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல் படகு சவாரி தொடங்கும் இடம், டிக்கெட் கவுண்ட்டர் ஆகியவற்றை தற்காலிகமாக வேறொரு இடத்திற்கு வனத்துறையினர் மாற்றினர். ஆனால் படகு சவாரி செயல்படவில்லை.

இந்த நிலையில் 2 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை முடிந்து நேற்று முதல் ரங்கனத்திட்டு பகுதிக்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் படகு சவாரியும் வழக்கம்போல் செயல்பட்டது. இதுபற்றி வனத்துறை அதிகாரி அனன்யகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேனீக்களின் தொல்லையால் இப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த 4 நாட்களில் தீப்பந்தங்கள் மூலமும், புகை மூட்டியும் தேனீக்களை இப்பகுதியில் இருந்து விரட்டி உள்ளோம். தற்போது ரங்கனத்திட்டு பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் படகு சவாரி மீண்டும் தொடங்கி உள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மராட்டிய மாநிலம், கோவா ஆகிய மாநிலங்களில் இருந்துதான் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story