கஜா புயலுக்கு பல லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்ததால் கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் டெல்டா மாவட்டங்கள்


கஜா புயலுக்கு பல லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்ததால் கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் டெல்டா மாவட்டங்கள்
x
தினத்தந்தி 20 May 2019 10:45 PM GMT (Updated: 20 May 2019 6:50 PM GMT)

கஜா புயலுக்கு பல லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்ததால் டெல்டா மாவட்டங்கள் கடுமையான வெப்பத்தை எதிர்கொண்டு வருகின்றன. தண்ணீர் இல்லாமல் நீர் நிலைகளும் வறண்டு காணப்படுகின்றன.

தஞ்சாவூர்,

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடந்த 20 நாட்களாக அதிக அளவில் காணப்படுகின்றது. கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அன்று முதல் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று தஞ்சை மாவட்டத்தில் 106 டிகிரியும், திருவாரூர் மாவட்டத்தில் 105 டிகிரியும் வெயில் கொளுத்தியது.

கடந்த சில ஆண்டுகளாக கோடை காலத்தில் டெல்டா மாவட்டங்களில் அதிகபட்சமாக 104 டிகிரி வரையில் வெயில் அடித்தது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் 106 டிகிரி மற்றும் அதையும் தாண்டியும் வெயில் அடித்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலினால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

குறிப்பாக இந்த மாவட்டங்களில் உள்ள தென்னை, அரசமரம், புளியமரம், ஆலமரம், வேப்பமரம், மூங்கில், முந்திரி, தேக்கு, வாகை, புங்கன் உள்ளிட்ட பல லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் டெல்டா மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது.

மேலும் சாலையின் இருபுறங்களிலும் இருந்த மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் சாலையோரங்கள் மட்டும் இன்றி ஊர்பகுதிகளிலும் இருந்த மரங்கள் அனைத்தும் விழுந்து விட்டன.

இதனால் இந்த மாவட்டங்களில் பசுமையாக காட்சி அளித்த பகுதிகள் அனைத்தும் மரங்கள் இன்றி வெட்ட வெளியாக காணப்படுகின்றன. இதனால் டெல்டா மாவட்டங்களில் இதுவரையில் இல்லாத அளவுக்கு வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சிறிதளவு கூட தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன.

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 694 ஏரிகளில் ஒரு சிலவற்றை தவிர்த்து மற்ற குளங்கள் தண்ணீர் இன்றி காணப்படுகின்றன. இதே போல் மாவட்ட நிர்வாகத்துக்கு சொந்தமான 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்களில் தண்ணீர் இல்லை. நிலத்தடி நீர் மட்டமும் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் கால்நடைகளின் தேவைக்கும், குடிநீருக்காகவும் மக்கள் பல கிலோ மீட்டர் தொலைவு நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் செல்லும் நிலை உள்ளது.

கஜா புயலால் மரங்கள் விழுந்த பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தாலும் இன்னும் முழு வீச்சில் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து வெப்ப நிலை அதிகரித்து வருவதுடன், டெல்டா மாவட்டங்களின் ஒட்டுமொத்த நீராதாரத்தையும் இழக்க வேண்டிய நிலை உருவாகி விடும் என பலரும் கூறி வருகிறார்கள்.

எதிர்காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து விடுபடவும், பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து அதிக அளவில் மரக்கன்றுகளை நடுவதற்கு அரசு முன்வர வேண்டும். மேலும் சாலையோரங்களில் விழுந்த மரங்களுக்கு பதிலாக அதிக பலன் தரக்கூடிய மரக்கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Next Story