செல்லிக்குறிச்சி ஏரியை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


செல்லிக்குறிச்சி ஏரியை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 22 May 2019 10:45 PM GMT (Updated: 22 May 2019 8:08 PM GMT)

செல்லிக்குறிச்சி ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டை தாலுகாவில் 50-க்கும் மேற்பட்ட ஏரிகளும், 300-க்கும் மேற்பட்ட பாசன குளங்களும் கடுமையான வறட்சியின் காரணமாக வறண்டு கிடக்கிறது. புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியை சேர்ந்த செல்லிக்குறிச்சி ஏரி 320 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் மூலம் புதுக்கோட்டை உள்ளூர், மழவேனிற்காடு பேய்க்காலிக்காடு, நடுவிக்காடு உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கல்லணைக்கால்வாயில் போதிய அளவு பாசனத்திற்கு தண்ணீர் வராததாலும், மழை இல்லாததாலும் கடல் போல் நீர் நிரம்பி காட்சி அளித்த செல்லிக்குறிச்சி ஏரி, இப்போது கடுமையான வறட்சி காரணமாக விளையாட்டுத்திடல் போல் நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

விவசாயிகள் கோரிக்கை

அரசு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் ஏரி, குளங்களை தூர்வாருவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தாலும் செல்லிக்குறிச்சி ஏரி மட்டுமல்ல இதுபோன்ற எண்ணற்ற ஏரி, குளங்களும் தூர்வாரப் படவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

பாசனத்திற்கு மேட்டூர் அணை திறந்தாலும் நேரடியாக நீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க முதலில் ஏரி, குளங்களை தூர்வாரி நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னர் கடைமடை பகுதி வரை பாசனத்திற்கு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும். எனவே செல்லிக்குறிச்சி ஏரி உள்பட அனைத்து ஏரி, குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை ஆகும்.

Next Story