வியாசர்பாடியில் பரிதாபம் கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி 2 வாலிபர்கள் பலி


வியாசர்பாடியில் பரிதாபம் கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 23 May 2019 9:45 PM GMT (Updated: 23 May 2019 5:01 PM GMT)

வியாசர்பாடியில், கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

பெரம்பூர்,

சென்னை மாதவரம் பால்பண்ணை இடைமாநகர் பெருமாள் கோவில் தெருவைச்சேர்ந்தவர் குப்புவேல். இவருடைய மகன் சிவகுமார் (வயது 20). இவர், தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்த நண்பர்கள் சையத் தமீம் அன்சாரி (18) மற்றும் ஒருவருடன் நேற்று முன்தினம் இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் வியாசர்பாடியில் இருந்து மாதவரம் மூலக்கடை நோக்கி சென்றார்.

வியாசர்பாடி சர்மாநகர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் சென்றபோது, இவர்களுக்கு முன்னால் துறைமுகத்தில் இருந்து மாதவரம் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரியை முந்திச்சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

இதில் சாலையில் விழுந்த சிவகுமார், சையத் தமீம் அன்சாரி ஆகியோர் மீது கன்டெய்னர் லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் 2 பேரும் உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். இவர்களுடன் வந்த மற்றொருவர் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கீழ்ப்பாக்கம் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக கன்டெய்னர் லாரி டிரைவரான கொடுங்கையூர் என்.எஸ்.கே.நகரைச் சேர்ந்த சர்தார் (56) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story