தீபாவளி வசூல் பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் நண்பனை கொலை செய்த நேபாள வாலிபருக்கு ஆயுள் தண்டனை


தீபாவளி வசூல் பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் நண்பனை கொலை செய்த நேபாள வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 28 May 2019 11:00 PM GMT (Updated: 28 May 2019 8:59 PM GMT)

தீபாவளி வசூல் பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் நண்பனை கொலை செய்த நேபாள வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருச்சி,

நேபாள நாட்டை சேர்ந்தவர்கள் தீபக் பகதூர் (வயது 30), உம்மர் சிங் (36). நண்பர்களான இவர்கள் இருவரும் திருச்சி பொன்னகர் கல்லுடைக்கும் பாறை பகுதியில் தங்கி இருந்து பீமநகர், ஒத்தக்கடை பகுதியில் உள்ள கடைகளுக்கு இரவு நேர காவல் வேலை செய்து வந்தனர். கடந்த 16-10-2017 அன்று தீபாவளி பண்டிகையையொட்டி இவர்கள் இருவரும் பீமநகர் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பணம் வசூல் செய்தனர். பின்னர் அன்று இரவு தீபக் பகதூர், அவரது சித்தப்பா களி, உம்மர் சிங் ஆகிய 3 பேரும் மது குடித்துவிட்டு ஹீபர் சாலையில் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு செல்லும் பாதை அருகில் அந்த பணத்தை பங்கு போட்டு பிரித்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தீபக் பகதூர் அரிவாளால் உம்மர் சிங்கை வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த உம்மர் சிங் அந்த இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.

ஆயுள் தண்டனை

இதையொட்டி திருச்சி செசன்சு கோர்ட்டு போலீசார் தீபக் பகதூரை கைது செய்து திருச்சி முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பி. கார்த்திகேயன் குற்றம் சாட்டப்பட்ட தீபக் பகதூருக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். 

Next Story