திருச்சி ஜங்‌ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது


திருச்சி ஜங்‌ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 28 May 2019 11:00 PM GMT (Updated: 28 May 2019 9:17 PM GMT)

திருச்சி ஜங்‌ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

திருச்சி,

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை கடந்த ஏப்ரல் மாதம் 2–வது வாரத்திற்கு பிறகு விடப்பட்டன. கோடைவிடுமுறையில் பொதுமக்கள் பலர் தங்களது சொந்த ஊர் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர். கோடை வெயிலின் உக்கிரம் ஒரு புறம் இருந்தாலும் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

ஜூன் 3–ந் தேதி திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வெளியூர் சென்றவர்கள் பலர் முன்கூட்டியே தங்களது இருப்பிடத்திற்கு திருப்பி கொண்டிருக்கின்றனர். இவ்வாறு வெளியூர் செல்பவர்கள் பெரும்பாலும் ரெயில் பயணத்தையே மேற்கொள்வதால் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அந்த வகையில் திருச்சி ஜங்‌ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நேற்று அலைமோதியது.


ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்ட்டர்களில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்பதிவில்லா டிக்கெட் பெற்றனர். எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதேபோல திருச்சியில் இருந்து இயக்கப்படும் பயணிகள் ரெயிலிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ரெயில் நிலையத்தில் 3 கவுன்ட்டர்களில் மட்டும் முன்பதிவில்லா டிக்கெட் வினியோகிக்கப்படுவதால் பயணிகள் காத்திருக்கும் நேரம் அதிகமாகுகிறது. கூடுதல் கவுன்ட்டர்களில் முன்பதிவில்லா டிக்கெட் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

கோடை விடுமுறையையொட்டி ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பவர்களை பிடிக்க டிக்கெட் பரிசோதகர் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெயில் நிலைய நடைமேடை மற்றும் ஓடும் ரெயில்களில் டிக்கெட் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story