தேனி அருகே, கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை


தேனி அருகே, கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 May 2019 10:15 PM GMT (Updated: 29 May 2019 7:26 PM GMT)

தேனி அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி,

தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி ஜோதி. இவர் சத்துணவு மையத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகள் வித்யா (21). மகன் தினேஷ் (19). கோபி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

வித்யா கோடாங்கிபட்டி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எட். முதலாம் ஆண்டு படித்து வந்தார். தினேஷ் மற்றொரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். நேற்று காலை தினேஷ், அவருடைய தாயார் ஜோதி ஆகியோர் வீட்டில் இருந்து வெளியே சென்று இருந்தனர். வித்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்நிலையில் நேற்று பகலில் அவருடைய வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் வித்யா உடல் கருகிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

போலீசார் சென்று பார்வையிட்ட போது, வித்யா உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். விசாரணையில், அவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

அவர் கடிதம் எதுவும் எழுதி வைத்துள்ளாரா? என்று வீட்டில் போலீசார் தேடிப் பார்த்தனர். அப்போது ஒரு டைரியில் சாக்லெட் சாப்பிட்டு விட்டு தாள்கள் மட்டும் மடித்து வைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் அவருடைய தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story