நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியின் பொய் பிரசாரத்தால் தோல்வி அடைந்தோம் - அமைச்சர் தங்கமணி பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியின் பொய் பிரசாரத்தால் தோல்வி அடைந்தோம் - அமைச்சர் தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 2 Jun 2019 11:15 PM GMT (Updated: 2 Jun 2019 7:42 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியின் பொய் பிரசாரத்தால் தோல்வி அடைந்தோம் என்று ஈரோட்டில் அமைச்சர் தங்கமணி கூறினார்.

ஈரோடு,

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு இருப்பதாக ஒரு பத்திரிகையில் தவறான செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். முதல்–அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது 2015–ம் ஆண்டு மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்கினார். அதில் இருந்து மின்வெட்டு இல்லாத மாநிலமாக, ஏன் மின்மிகை மாநிலமாக தமிழகத்தை வைத்திருக்கிறோம். செய்தி வெளியிட்ட பத்திரிகை நிறுவனத்திலேயே எப்போது மின்வெட்டு ஏற்பட்டது என்று என்னிடம் தெரிவித்தால் அதற்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்.

தொழிற்சாலைகளில் மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரை மின்சாரத்தை பயன்படுத்தாமல், ஜெனரேட்டர் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியதாக தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள். எந்த தொழிற்சாலைக்கு வேண்டுமென்றாலும் சென்று பாருங்கள். தொழிற்சாலைகளில் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறதா? இல்லையா? என்று தெரியவரும்.

இந்த ஆட்சிக்கு கெட்டபெயர் ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே தவறான செய்தி பரப்பப்படுகிறது. கடந்த 27–ந் தேதி காற்றாலை மின் உற்பத்தி 3 ஆயிரம் மெகாவாட்டில் இருந்து 100 மெகாவாட்டாக திடீரென குறைந்துவிட்டது. அதனால் தொழிற்சாலைகளில் அன்றைய தினம் மட்டும் 4 மணிநேரம் ஜெனரேட்டரை பயன்படுத்துமாறு கூறிஇருந்தோம். அதன்பிறகு அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கிய பிறகு மின்வினியோகம் செய்யப்பட்டது. அதில் இருந்து தடையில்லா மின்சாரம் வழங்கி வருகிறோம்.

மழை பெய்யும்போதும், காற்று வீசும்போதும் மட்டும் பாதிப்புகள் இருந்தால் மின்தடை ஏற்படுகிறது. அப்போதும், மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள். இதனால் சுமார் ஒரு மணிநேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. இதையெல்லாம் மின்வெட்டு என்று கூறுகிறார்கள்.

இந்த ஆண்டுக்கு தேவையான மின்சாரம் இருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒரு ஆண்டாக ஒரு யூனிட் நிறுத்தப்பட்டு இருந்தது. கடந்த 10 நாட்களாக அங்கு மின்உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் இருந்து 800 மெகாவாட் மின்சாரம் கிடைத்து கொண்டிருக்கிறது. எனவே தேவைக்கு அதிகமாக மின்சாரம் இருப்பதால் அனல் மின்நிலையத்தை பராமரிப்பு பணிக்காக தற்போது நிறுத்தி வைத்திருக்கிறோம்.

மின்சாரம் பற்றாக்குறை என்று பொதுமக்களிடையே பீதியை கிளப்ப எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் மின்மிகை மாநிலமாகவே தமிழகத்தை பாதுகாத்து வருகிறோம்.

எதிர்க்கட்சியின் பொய் பிரசாரம் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி ஏற்பட்டது. கல்வி கடனை ரத்து செய்வோம் உள்ளிட்ட பொய்யான வாக்குறுதிகளை எதிர்க்கட்சியினர் முன்வைத்தனர். தமிழகத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான ஆட்சி நீடிக்க வேண்டுமென்பதால்தான் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து உள்ளனர்.

ஈரோட்டில் புதைவட மின்கேபிள் அமைக்கும் பணிகள் முறையாக நடந்து வருகிறது. பாலம் வேலை நடந்ததால் பொதுமக்களுக்கு சற்று இடையூறு ஏற்பட்டது. இந்த பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.


Next Story