கூலித்தொழிலாளி கொலை வழக்கில் அண்ணனுக்கு 10 ஆண்டு சிறை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு


கூலித்தொழிலாளி கொலை வழக்கில் அண்ணனுக்கு 10 ஆண்டு சிறை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 3 Jun 2019 10:45 PM GMT (Updated: 3 Jun 2019 7:29 PM GMT)

கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது அண்ணனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது அண்ணன் ஹரிராஜ் (68). இவர்கள் இருவருக்கும் இடையே நீண்ட காலமாக நிலத்தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ந் தேதி இரவு இவர்களுக்கு இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் ஹரிராஜ், அவரது மகன் பூமிராஜ் (32) ஆகியோர் சேர்ந்து கட்டையால் துரைராஜை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த துரைராஜ் இறந்து விட்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக துரைராஜின் மகன் மூர்த்தி எருமப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ஹரிராஜ், பூமிராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் மீது நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தனசேகரன் வாதாடினார். இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி இளவழகன் குற்றம் சாட்டப்பட்ட ஹரிராஜூக்கு 10 ஆண்டுகள் சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.இதையடுத்து அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்து சென்றனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பூமிராஜூக்கு 2 மாதம் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story