விதிகளை மீறி நடந்த சபாநாயகர் தேர்தலை சட்டரீதியாக சந்திப்போம் - அன்பழகன் எம்.எல்.ஏ. பேட்டி


விதிகளை மீறி நடந்த சபாநாயகர் தேர்தலை சட்டரீதியாக சந்திப்போம் - அன்பழகன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 4 Jun 2019 12:15 AM GMT (Updated: 4 Jun 2019 12:14 AM GMT)

விதிமுறைகளை மீறி நடந்த சபாநாயகர் தேர்தலை சட்டரீதியாக சந்திப்போம் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

புதுவை சபாநாயகர் தேர்தல் நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்ததால் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த சிவக்கொழுந்து சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர் நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் சபாநாயகராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதீய ஜனதா ஆகியன அறிவித்திருந்தன. இந்தநிலையில் புதுவை சட்டசபை வளாகத்தில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்துக்கு அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆளும் காங்கிரஸ் அரசு கோஷ்டிபூசல் மற்றும் தோல்வி பயத்தால் சபாநாயகர் தேர்தலை தனக்கு சாதகமாக நடத்த சட்டவிதிகளை மீறி உள்ளது. இதனை கண்டிக்கும் விதத்தில் சட்டமன்ற கூட்டத்தையும், சபாநாயகர் தேர்தலையும் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்தோம்.

காங்கிரசில் உள்ள கோஷ்டிபூசல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் மூலமாக வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சட்டவிரோதமான சபாநாயகர் தேர்தலை அ.தி.மு.க. தலைமையிடம் எடுத்துக்கூறி இப்பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொள்வோம்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

புதுச்சேரி சபாநாயகர் தேர்தல் பணபேரத்தால் நடந்துள்ளது. இது ஜனநாயக படுகொலை. இதன் காரணமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

புதுவையில் ஆட்சி மாற்றத்துக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களே காரணமாகிவிடுவார்கள். கால அவகாசம் தராமல் நடத்தப்பட்ட சபாநாயகர் தேர்தலை எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளோம்.

இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

பேட்டியின்போது எம்.எல்.ஏ.க்கள் செல்வகணபதி, சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story