வீரகனூரில், கோவில் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


வீரகனூரில், கோவில் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Jun 2019 10:24 PM GMT (Updated: 4 Jun 2019 10:24 PM GMT)

வீரகனூரில் கோவில் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைவாசல்,

தலைவாசல் அருகே வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தென்கரை பெரியாயி அம்மன் கோவில் அருகில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை அமைய உள்ளதாக பொதுமக்கள் மத்தியில் கடந்த 4 நாட்களாக தகவல் பரவியது. இதையடுத்து இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், அந்த கடையை அங்கு வைக்க கூடாது என்று தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இதன் முதற்கட்டமாக அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் டாஸ்மாக் கடையை கோவில் அருகே கொண்டு வர எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி கருப்பு கொடி கட்டி பதாகை ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் தங்களது எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தவும், கோர்ட்டுக்கு சென்று சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறினர்.


Next Story