திருவள்ளூர் மாவட்டத்தில் குப்பையில் தீ வைத்து விபத்து ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை


திருவள்ளூர் மாவட்டத்தில் குப்பையில் தீ வைத்து விபத்து ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 Jun 2019 10:30 PM GMT (Updated: 9 Jun 2019 7:45 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் குப்பையில் தீ வைத்து விபத்து ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் குப்பைகள் மற்றும் சேகரிக்கும் இடங்களில் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் அதனால் ஏற்படும் நச்சுப்புகையால் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு உடல் நலக்கோளாறு அதிக அளவில் ஏற்படுகிறது.

மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கு இந்த நிகழ்வு தொடர்பான தீவிபத்து அழைப்புகள் அடிக்கடி வருகிறது. இதனால் சில இடங்களில் மற்றும் கட்டிடங்களில் ஏற்படும் முக்கிய தீ விபத்துகளை கையாள்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குப்பை தீ விபத்துகள் அமைகிறது.

பொது இடங்களில் உள்ள குப்பைகளை தனி நபர்கள் எரிப்பதால் பெரிய தீவிபத்துகளாக மாறும். எனவே அவர்கள் குப்பைகளை எரிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இது போன்ற தீவிபத்துகள் அடிக்கடி நிகழ்ந்தவாறு உள்ளது. எனவே இது போன்று பொதுஇடங்களில் உள்ள குப்பைகளை எரித்து தீ விபத்து ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story