4 ஆண்டுகளாக காட்சி பொருளாக உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தை திறக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


4 ஆண்டுகளாக காட்சி பொருளாக உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தை திறக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 24 Jun 2019 10:30 PM GMT (Updated: 24 Jun 2019 7:26 PM GMT)

கும்பகோணம் அருகே, 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு காட்சி பொருளாக உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்பகோணம்,

டெல்டா மாவட்டங்களில் சம்பா, குறுவை, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் கோடை நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் நெல்லை, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அரசு சார்பில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இந்த கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம், சோழன் மாளிகை, பம்பைபடையூர், முழையூர்சத்திரம், கீழபழையார், ஆவூர், தேனாம்படுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய கும்பகோணம் அருகே சோழன்மாளிகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 2014-15-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் இதுவரை திறக்கப்படாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைவித்த நெல்களை தற்போது தனியார் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு காட்சி பொருளாக உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story