மோசடியில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டில் போலி ஆவணங்கள் கொடுத்த 6 பேர் கைது


மோசடியில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டில் போலி ஆவணங்கள் கொடுத்த 6 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jun 2019 10:30 PM GMT (Updated: 25 Jun 2019 7:18 PM GMT)

மோசடியில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டில் போலி ஆவணங்கள் கொடுத்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

பவானி,

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள தொட்டிபாளையம் பனங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவர் உள்பட அதே ஊரைச்சேர்ந்த 9 பேரை பவானி மற்றும் ஈரோட்டை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, ராதா, நிர்மலா ஆகியோர் கடந்த 9–ந் தேதி சந்தித்தார்கள்.

அப்போது அவர்கள், நீங்கள் 9 பேரும் ஏற்கனவே பாரத பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் பயன்பெற பணம் கட்டியுள்ளீர்கள். மேலும் தலா ரூ.5 ஆயிரம் கட்டினால் உங்களுக்கு உடனே வீடுகட்ட ஆணை வழங்கப்படும் என்றார்கள். ஆனால் அவர்கள் மேல் லட்சுமிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் இதுபற்றி பவானி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தட்சிணாமூர்த்தி, ராதா, நிர்மலா ஆகிய 3 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் சிறையில் இருக்கும் 3 பேரையும் ஜாமீனில் விடுவிக்க நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சூரியம்பாளையத்தை சேர்ந்த மணி (வயது 55), சந்திரன் (42), அங்கமுத்து (66), இளங்கோவன் (58), மற்றொரு சந்திரன் (38), சுப்பிரமணி (70) ஆகியோர் தங்களுடைய முகவரி உள்ளிட்ட ஆவணங்களை நேற்று முன்தினம் பவானி 2–வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழங்கினர்.

அதைத்தொடர்ந்து ஜாமீன் ஆவணங்கள் சரிதானா? என்பதை ஆய்வு செய்யுமாறு திருச்செங்கோடு தாசில்தாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அப்போது 6 பேரும் ஜாமீனுக்காக கொடுத்த முகவரி உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை என்று தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து 6 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பவானி குற்றவியல் நீதிமன்ற தலைமை எழுத்தர் சிவராஜ் பவானி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி, சந்திரன், அங்கமுத்து, இளங்கோவன், மற்றொரு சந்திரன், சுப்பிரமணி ஆகியோரை கைது செய்தார்கள்.

மோசடி வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்க, போலி ஆவணங்கள் கொடுத்து மேலும் 6 பேர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story