அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை ஆராய்ச்சி நிலையம் தகவல்


அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 28 Jun 2019 10:00 PM GMT (Updated: 28 Jun 2019 4:12 PM GMT)

அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 4 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை. அதேபோல் அடுத்த 4 நாட்களுக்கு 10 கி.மீட்டர் வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசும்.

மேலும் வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், நாளை மறுநாளும் (திங்கட்கிழமை), ஜூலை 2-ந் தேதியும் 100.4 டிகிரியாகவும் இருக்கும். அதேபோல் குறைந்தபட்சமாக இன்றும், நாளையும் 78.8 டிகிரியாகவும், நாளை மறுநாளும், ஜூலை 2-ந் தேதியும் 80.6 டிகிரியாகவும் இருக்கும் . காற்றின் ஈரப்பதம் அடுத்த 4 நாட்களுக்கு அதிகப்படியாக முறையே 70, 70, 75, 75 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 35, 35, 40, 40 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் அடுத்த 4 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு மழை பெய்ய வாய்பபு இல்லை. அதிக பட்ச வெப்பம் 98.6 டிகிரியாகவும், இரவு வெப்ப அளவு 78.8 டிகிரியாகவும் நிலவும். காற்றின் வேகம் இனி வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும்.

பகல் வெப்பம் 98.6 டிகிரியாக காணப்பட்டாலும், அதன் தாக்கம் அதிகரித்த காற்றினால் இருக்காது. பக்கவாட்டில் படுதாவை 3 அடி உயரத்திற்கு கட்டுவது நல்லது. மேலும் மக்காச்சோளத்தின் வரத்து மிகவும் குறைவாக இருப்பதால், கோழிகளுக்கு மற்ற தானியங்களை பயன்படுத்தி தீவன தயாரிப்பில் இறங்குவது அதிகமாகி உள்ளது.

இத்தகைய சமயங்களில் எரி சக்தியின் அளவை கோழிகளின் தேவைக்கு ஏற்ப மாற்றியமைத்து தர வேண்டும். எரி சக்தியின் அளவு குறையும் பட்சத்தில் முட்டை எடை குறைபாடுகளும், முட்டையின் உற்பத்தி சதவீதமும் குறையும் வாய்ப்பு உள்ளது. எனவே, மக்காச்சோளத்தின் அளவை குறைக்கும் பட்சத்தில்,தாவர எண்ணெய் மற்றும் அதிக எண்ணை அளவு கொண்ட ரைஸ்பாலிஸ் ஆகிய மூலப்பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் ஈகோலை கிருமியின் பாதிப்பால் இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்து உள்ளது. எனவே, பண்ணையாளர்கள் ஈகோலை கிருமியின் தாக்கத்தை தடுக்க கோழித் தீவனம் மற்றும் குடிநீரில் தகுந்த கிருமிநாசினி உபயோகிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story