நாமக்கல்லில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 July 2019 11:00 PM GMT (Updated: 5 July 2019 4:42 PM GMT)

நாமக்கல்லில் நேற்று 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

பொது வினியோக திட்டத்திற்கு என தனித்துறை அமைக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்கப்பட வேண்டும். ரேஷன் கடைகளில் பணியாளர்களின் முன்பு கட்டுப்பாட்டு பொருட்கள் அனைத்தும் எடையிட்டு வழங்கப்பட வேண்டும். மின்னணு ரேஷன்கார்டு வழங்குதல் உள்ளிட்ட அனைத்தையும் 100 சதவீதம் கணினி மயமாக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மூர்த்தி வரவேற்று பேசினார். இதில் மாவட்ட துணை தலைவர் தண்டபாணி, இணை செயலாளர்கள் ராஜசேகர், வெற்றிவேல் உள்பட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பணிவரன்முறை செய்யப்படாத பணியாளர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி பணிவரன் முறை செய்திட வேண்டும். ரேஷன்கடை பணியாளர்கள் வாங்கும் கடைசி மாத ஊதியத்தில் சரிபாதி ஓய்வூதியமாக வழங்க வேண்டும். கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்ய நிர்ப்பந்திக்க கூடாது. ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அத்தியாவசிய பொருட்களை 100 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Next Story