பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய உதவி தலைமை ஆசிரியர் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்


பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய உதவி தலைமை ஆசிரியர் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 7 July 2019 11:15 PM GMT (Updated: 7 July 2019 5:29 PM GMT)

பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சிக்கியது எப்படி? என்று பரபரப்பு தகவல்கள் கிடைத்து உள்ளது.

சேலம், 

சேலம் அருகே காக்காபாளையம் பகுதியில் வேம்படித்தாளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சுற்றியுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ்-2 படித்தார்.

அந்த பள்ளியில் சேலம் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 42) என்பவர் வேதியியல் ஆசிரியராகவும், உதவி தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளார். இவர் பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தாள். மாணவி கர்ப்பம் ஆன சம்பவம் சகதோழிகளுக்கு தெரிந்து உள்ளது. மேலும் பள்ளி ஆசிரியர்களுக்கும் தெரிந்தது. இதனால் இந்த சம்பவம் பள்ளிக்கூடத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

மாணவியை கர்ப்பமாக்கிய சம்பந்தப்பட்ட உதவி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளியில் படித்து வரும் மற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் ஏராளமானவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் மாணவி கர்ப்பம் ஆன சம்பவம் வெளியில் தெரிந்ததும், உதவி தலைமை ஆசிரியர் பாலாஜி விடுமுறை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் உதவி தலைமை ஆசிரியர் பாலாஜியை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அரியானூர் பகுதியில் மறைந்து இருந்த உதவி தலைமை ஆசிரியர் பாலாஜியை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில், உதவி தலைமை ஆசிரியர் பாலாஜி பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். இது குறித்து போலீசார் கூறும்போது, கடந்த 4 மாதத்திற்கு முன்பு ஒரு நாள் பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வக அறையில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தி உள்ளார். பின்னர் செய்முறை வகுப்பு முடிந்ததும் மாணவ, மாணவிகள் ஆய்வகத்தில் இருந்து வகுப்பறைக்கு சென்று உள்ளனர்.

சம்பந்தப்பட்ட மாணவியை மட்டும் ஆய்வகத்தில் இருக்கும் படி உதவி தலைமை ஆசிரியர் பாலாஜி கூறி உள்ளார். ஏதோ பாடத்தில் உள்ள சந்தேகம் பற்றி சொல்லி கொடுப்பார் என்று நினைத்து அந்த மாணவியும் ஆய்வகத்தில் இருந்து உள்ளார். மற்ற மாணவ, மாணவிகள் ஆய்வகத்தை விட்டு வெளியில் சென்றதை அறிந்து கொண்ட அவர், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கர்ப்பம் ஆன மாணவிக்கு நேற்று முன்தினம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் மாணவி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவியை கர்ப்பமாக்கிய சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட உதவி தலைமை ஆசிரியர் பாலாஜிக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

Next Story