ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி சாவு தண்ணீர் எடுக்க சென்ற போது பரிதாபம்


ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி சாவு தண்ணீர் எடுக்க சென்ற போது பரிதாபம்
x
தினத்தந்தி 7 July 2019 10:45 PM GMT (Updated: 7 July 2019 6:32 PM GMT)

ராசிபுரம் அருகே தண்ணீர் எடுக்க சென்ற போது கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

ராசிபுரம்,

ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். கூலித்தொழிலாளி. இவரது மகள் நந்தினி (வயது 20). இவர் ராசிபுரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று காலையில் நந்தினி அந்த பகுதியில் உள்ள பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நந்தினி கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.

தண்ணீரில் தத்தளித்த அவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்தனர்.

ஆனால் சிறிது நேரத்திலேயே நந்தினி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து மாணவியின் உடலை பொதுமக்கள் மீட்டு மேலே கொண்டு வந்தனர். மேலும் அவர்கள் இது குறித்து ராசிபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் எடுக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story