திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் 1-ந்தேதி தொடங்குகிறது


திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் 1-ந்தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 16 July 2019 11:00 PM GMT (Updated: 16 July 2019 6:40 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது.

திருவாரூர்,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் 6 வயது முதல் 18 வயது வரையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் குறித்து மாவட்ட அலுவலர்களுக்கான திட்டமிடல் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளி மற்றும் இல்லம் சார்ந்த 6 முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமிற்கு எலும்பு முறிவு மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், கண் மருத்துவம் சார்ந்த மருத்துவக்குழு மதிப்பீடு செய்து தேவையான உதவி உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை மற்றும் அறுவை சிகிச்சைக்கான ஆலோசனைகள் (முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம்) வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் மருத்துவ மதிப்பீட்டு முகாம் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. அதன்படி திருவாரூர் ஒன்றியத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் தேதி திருவாரூர் பாத்திமா உயர்நிலைப்பள்ளியிலும், 2-ந் தேதி கொரடாச்சேரி ஒன்றியத்தில் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 5-ந் தேதி வலங்கைமான் ஒன்றியத்தில் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 6-ந் தேதி மன்னார்குடி ஒன்றியத்தில் நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளியிலும், 7-ந் தேதி திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், 8-ந் தேதி முத்துப்பேட்டை ஒன்றியத்தில் முத்துபேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் நடைபெறுகிறது.

இதேபோல் 8-ந் தேதி நன்னிலம் ஒன்றியத்தில் நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலம், 13-ந் தேதி நீடாமங்கலம் ஒன்றியத்தில் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 14-ந் தேதி கோட்டூர் ஒன்றியத்தில் கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 16-ந் தேதி குடவாசல் ஒன்றியத்தில் ஓகை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் நடைபெறுகிறது. இம்மருத்துவ மதிப்பீட்டு முகாம்களின் வாயிலாக பயனடையாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் வகையில் முகாம்கள் நடத்தப்பட வேண்டும். எனவே அனைத்து மாற்றுத்திறனாளிகளும் மருத்துவ மதிப்பீட்டு முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர்் கூறினார்.

கூட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரி தியாகராஜன், நோடல் அதிகாரி டாக்டர் கார்த்திக்கேயன், அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர் பாலமுரளி, சுகாதார பணிகள் உதவி இயக்குனர் பாஸ்கரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், மாவட்டக்கல்வி அலுவலர்கள் ராமன், மணிவண்ணன், உதவித்திட்ட அலுவலர் கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story