கிருஷ்ணகிரியில் பரபரப்பு தலையில் கல்லைப்போட்டு தாய் படுகொலை தற்கொலைக்கு முயன்ற மகன் கைது


கிருஷ்ணகிரியில் பரபரப்பு தலையில் கல்லைப்போட்டு தாய் படுகொலை தற்கொலைக்கு முயன்ற மகன் கைது
x
தினத்தந்தி 16 July 2019 11:15 PM GMT (Updated: 16 July 2019 8:38 PM GMT)

கிருஷ்ணகிரியில் தலையில் கல்லைப்போட்டு தாயை படுகொலை செய்த மகன் தற்கொலைக்கு முயன்றார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி,

சேலம் நெத்திமேட்டைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 28). இவர் ரப்பர் ஸ்டாம்ப் செய்ய கூடிய கடை நடத்தி வருகிறார். இவரது தாயார் வைரம்மாள் (55). இவர் சேலத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் மகன் கார்த்தி மீது புகார் கொடுத்தார். இதன் காரணமாக தாய்-மகன் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை கோவிலுக்கு சென்று வரலாம் என்று வைரம்மாளை வாடகை காரில் அழைத்து கொண்டு கார்த்தி கிருஷ்ணகிரிக்கு வந்தார். கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் தாயுடன் கீழே இறங்கிய கார்த்தி காரை திரும்ப அனுப்பி வைத்தார். தொடர்ந்து தாயை அழைத்துக்கொண்டு அந்த பகுதியில் உள்ள தர்காவிற்கு கார்த்தி சென்றார்.

அப்போது வழியில் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்தி அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தாய் வைரம்மாளை கீழே தள்ளி அங்கிருந்த கல்லை தூக்கி தலையில் போட்டார். இதில் வைரம்மாள் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். மேலும், தாயை கொலை செய்த கார்த்தி அருகில் இருந்த ஒரு குச்சியை எடுத்து தனது கழுத்தில் குத்தி தற்கொலைக்கு முயன்றார்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்த்தியை கைது செய்தனர். மேலும் வைரம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கார்த்தியை போலீசார் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரியில் குடும்ப தகராறில் தாயின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த மகன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story