சத்தியமங்கலம் அருகே பயங்கரம்; வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து கொலை


சத்தியமங்கலம் அருகே பயங்கரம்; வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து கொலை
x
தினத்தந்தி 20 July 2019 11:30 PM GMT (Updated: 20 July 2019 7:18 PM GMT)

சத்தியமங்கலம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

சத்தியமங்கலம்,

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ். அவருடைய மனைவி தேவி (வயது 55). இவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமங்கலம் வந்து வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இவர்களுக்கு குமார் என்ற மகனும், துளசி என்ற மகளும் உள்ளனர். இதில் குமார் திருமணம் ஆகி சத்தியமங்கலம் காந்தி நகரிலும், துளசி திருமணம் ஆகி ஈரோடு பகுதியிலும் வசித்து வருகின்றனர்.

சுரேஷ் லாரி கிளீனர். வேலை வி‌ஷயமாக வெளியூரிலே தங்கி இருந்து வருகிறார். எப்போதாவது வீட்டுக்கு வந்து மனைவியை பார்த்துவிட்டு செல்வார். இதனால் தேவி தனியாக இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று தேவி வெகுநேரமாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மதியம் 2 மணி அளவில் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு தேவி தரையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே இதுபற்றி சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் தேவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ஆனால் கொலை செய்தவர்கள் யார்? என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார்? என்று தெரியவில்லை. பிணத்தின் அருகே பாதி குடித்த நிலையில் மது பாட்டிலும், மஞ்சள் கயிறும் கிடந்தது.

அவற்றை போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து கொலையாளியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

சத்தியமங்கலம் அருகே கழுத்தை அறுத்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story