வருவாய்த்துறையில் பதவி உயர்வு, பணியிட மாறுதலுக்கு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் மாநில செயற்குழுவில் வலியுறுத்தல்


வருவாய்த்துறையில் பதவி உயர்வு, பணியிட மாறுதலுக்கு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் மாநில செயற்குழுவில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 July 2019 10:45 PM GMT (Updated: 28 July 2019 8:27 PM GMT)

வருவாய்த்துறையில் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கு மாவட்ட அளவில் கலந்தாய்வு முறை கொண்டு வர வேண்டும் என்று வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர் சங்க மாநில செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டது.

திருச்சி,

தமிழ்நாடு வருவாய்த்துறை(குரூப்-2) நேரடி நியமன அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் சையது அபுதாகீர் தலைமை தாங்கி பேசினார். மாநில பொதுச்செயலாளர் தர்மராஜ், பொருளாளர் ரமேஷ்போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மாவட்ட பொருளாளரும், துணை தாசில்தாருமான தமிழ்ச்செல்வன் வரவேற்று பேசினார்.

சங்கத்தின் நிறுவன தலைவர் வீ.இருளப்பன், நிறுவன பொதுச்செயலாளர் குணசேகரன், ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோவன் ஆகியோர் தீர்மானங்களை விளக்கி பேசினர். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் சிவசுப்பிரமணி, திருச்சி மாவட்ட செயலாளர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பதவி உயர்வுக்கு கலந்தாய்வு

வருவாய்த்துறையில் உதவியாளர் முதல் தாசில்தார் வரை பதவி உயர்வு, பணியிடமாறுதல் உள்ளிட்டவை மாவட்ட அளவில் கலந்தாய்வு முறை கொண்டு வந்து நடத்தப்பட வேண்டும். நேரடி நியமன உதவியாளர்களுக்கு வருவாய் ஆய்வாளர் பயிற்சியை ஓராண்டாக குறைக்க வேண்டும். நேரடி நியமன உதவியாளர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசாணை எண் 133 தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மாவட்ட அளவில் விரைந்து செயல்படுத்த வேண்டும்.

நேரடி நியமன உதவியாளர்களுக்கு வழங்க வேண்டிய பவானிசாகர் அடிப்படை பயிற்சியை உடனடியாக வழங்க வேண்டும். நேரடி நியமன உதவியாளர் பெயரை ‘புரோ-டிடி’ என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story