தமிழக அரசை விமர்சித்த வழக்கில், விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் கிருஷ்ணகிரி கோர்ட்டு உத்தரவு


தமிழக அரசை விமர்சித்த வழக்கில், விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் கிருஷ்ணகிரி கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Aug 2019 11:00 PM GMT (Updated: 5 Aug 2019 7:43 PM GMT)

தமிழக அரசை விமர்சித்த வழக்கில் விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என கிருஷ்ணகிரி கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தமிழக அரசை விமர்சித்து பேசியதாக அவர் மீது அன்றைய அரசு வழக்கறிஞர் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க் கள் மீதான வழக்குகளை விசாரிக்க கூடிய சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் அவதூறு வழக்குகளை அந்தந்த மாவட்ட நீதிமன்றங்கள் விசாரிக்க உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கு நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி மீனாசதீஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் விஜயகாந்த் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். அன்றைய தினம் விஜயகாந்த் கோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தர விடப்பட்டுள்ளது.

இதே போல தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக தி.மு.க. முன்னாள் எம்.பி. செல்வகணபதி மீது கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அங்கிருந்து மீண்டும் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக செல்வகணபதி கோர்ட்டில் ஆஜர் ஆனார். இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணையை 21-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். 

Next Story