மல்லப்புரம், மயிலாடும்பாறை, சந்தையூர், சாப்டூர் மலைப்பாதை சாலைக்கு திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவு


மல்லப்புரம், மயிலாடும்பாறை, சந்தையூர், சாப்டூர் மலைப்பாதை சாலைக்கு திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவு
x
தினத்தந்தி 5 Aug 2019 10:30 PM GMT (Updated: 5 Aug 2019 7:52 PM GMT)

மல்லப்புரம், மயிலாடும்பாறை, சந்தையூர், சாப்டூர் மலைப்பாதையில் சாலை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

பேரையூர்,

பேரையூர் தாலுகாவில் உள்ளது மல்லப்புரம், மயிலாடும்பாறை மலைப்பாதை மதுரை-தேனி மாவட்டங்களை இணைக்கும் சாலை ஆகும். இந்த சாலையின் குறிப்பிட்ட பகுதி வனப்பகுதிக்குள் வருவதால் பாதை அமைப்பதில் கடந்த 20 வருடங்களாக தாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது பஸ் போக்குவரத்து இல்லாத நிலையில் இந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் தினசரி வேன் மற்றும் இருசக்கர வாகனம் மூலம் சென்று வருகின்றனர்.

இந்த பாதையில் முழுமையாக சாலை அமைத்தால் இந்த பகுதி மக்கள், விவசாயிகள் ஆகியோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இப்பகுதி மக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இதேபோல் சந்தையூர், சாப்டூர் சாலை கடந்த 30 வருடங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு சாலை பணி பாதிஅளவு மட்டுமே நிறைவேற்றப்பட்டது. மீதம் உள்ள சாலை வனப்பகுதியில் வருவதால் சாலை பணி முடிவடையாமல் இருந்து வந்தது. இதுகுறித்தும் இப்பகுதி மக்கள் பலவருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த இரண்டு சாலை பணிகளும் முழுமை அடைந்தால் பல கி.மீ. பயண நேரம் பொதுமக்களுக்கு மிச்சமாகும். இந்த சாலை பணிகளை பார்வையிட மாவட்ட கலெக்டர் ராஜசேகர் நேற்று பேரையூர் தாலுகா அலுவலகம் வந்து இப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் வருவாய்துறை, நெடுஞ்சாலை துறை ஆகிய துறைகளை சார்ந்த அதிகாரிகளை அழைத்து இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து இந்த மலைப்பாதைகளை நெடுஞ்சாலைத்துறை மூலமாக முழுமையாக அமைப்பதற்கு திட்ட அறிக்கை தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Next Story