திண்டுக்கல் அருகே துணிகரம், தோல் வியாபாரி வீட்டில் வைர கற்கள் திருட்டு


திண்டுக்கல் அருகே துணிகரம், தோல் வியாபாரி வீட்டில் வைர கற்கள் திருட்டு
x
தினத்தந்தி 6 Aug 2019 11:00 PM GMT (Updated: 6 Aug 2019 6:03 PM GMT)

திண்டுக்கல் அருகே தோல் வியாபாரி வீட்டில் வைர கற்கள் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குள்ளனம்பட்டி,

திண்டுக்கல் அருகே உள்ள கே.ஆர்.நகரை சேர்ந்தவர் ஷபி அகமதுகான் (வயது 40). தோல் வியாபாரி. இவர் கடந்த 31-ந்தேதி கேரளாவில் உள்ள அவரது உறவினர் வீட்டின் விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்று விட்டார். பின்னர் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் குடும்பத்துடன் வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள 5 பீரோக்கள் உடைக்கப்பட்டு ரூ.1½ லட்சம் மதிப்புள்ள வைர கற்கள் மற்றும் 6 பவுன் நகை, ரூ.49 ஆயிரத்து 200 ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஷபி அகமதுகான் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத் தலைமையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் தங்களது கைவரிசையை காட்டியது தெரியவந்தது. மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி போய் நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வைர கற்கள், தங்க நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது. 

Next Story