கோவில்பட்டியில், உதவி கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை - சீராக குடிநீர் வழங்க கோரிக்கை


கோவில்பட்டியில், உதவி கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை - சீராக குடிநீர் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 6 Aug 2019 11:00 PM GMT (Updated: 6 Aug 2019 10:37 PM GMT)

கோவில்பட்டி இலுப்பையூரணி பகுதியில் சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி, உதவி கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி இலுப்பையூரணி பஞ்சாயத்து என்.ஜி.ஓ. காலனி, பழத்தோட்டம் நகர், கைவண்டி தொழிலாளர் காலனி பகுதி மக்கள், தி.மு.க. மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தனம் தலைமையில் நேற்று காலிக்குடங்களுடன் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்தவாறு, தங்கள் பகுதியில் சீராக குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில், தங்களது பகுதிகளுக்கு கடந்த 6 மாதங்களாக சீவலப்பேரி குடிநீர் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக ஆழ்குழாய் கிணறு மூலம் உப்பு தண்ணீரையே எடுத்து வாரத்துக்கு ஒரு முறை வினியோகம் செய்கின்றனர். அதுவும் ஒரு வீட்டுக்கு 2 அல்லது 3 குடம் தண்ணீரே கிடைக்கிறது.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டும், எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே தங்களது பகுதிக்கு சீவலப்பேரி குடிநீரை சீராக வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மனுவை பெற்று கொண்ட உதவி கலெக்டர், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story