விபத்து வழக்குகளில் நஷ்டஈடு வழங்காததால் 4 அரசு பஸ்கள் ஜப்தி


விபத்து வழக்குகளில் நஷ்டஈடு வழங்காததால் 4 அரசு பஸ்கள் ஜப்தி
x
தினத்தந்தி 7 Aug 2019 11:00 PM GMT (Updated: 7 Aug 2019 8:30 PM GMT)

விபத்து வழக்குகளில் நஷ்டஈடு வழங்காததால் 4 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி,  

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா திப்பனூரை சேர்ந்தவர் அர்ச்சுனன். கடந்த 3.8.2004 அன்று இவர் அரசு பஸ் மோதி இறந்து விட்டார். இதையடுத்து இவரது குடும்பத்தினர் நஷ்டஈடு கேட்டு கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த கிருஷ்ணகிரி மாவட்ட சிறப்பு நீதிமன்றம் அர்ச்சுனன் குடும்பத்திற்கு ரூ.7 லட்சத்து 85 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது.

ஆனாலும் போக்குவரத்து கழகம் சார்பில் நஷ்டஈடு தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து அர்ச்சுனன் குடும்பத்தினர் சார்பில் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நஷ்டஈடு வழங்காததால் அரசு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து கோர்ட்டு அமீனாக்கள் நேற்று காலை கிருஷ்ணகிரி பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு சேலத்தில் இருந்து பெங்களூரு செல்ல இருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்து கிருஷ்ணகிரி நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தனர். இதே போல மேலும் வெவ்வேறு 3 விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்காததால் மேலும் 3 அரசு பஸ்கள் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று ஜப்தி செய்யப்பட்டன.

இவ்வாறு ஜப்தி செய்யப்பட்ட 4 அரசு பஸ்களும் கிருஷ்ணகிரி நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டன. விபத்து வழக்குகளில் நஷ்ட ஈடு வழங்காததால் ஒரே நாளில் 4 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story