அஜித் படத்திற்கு செல்ல விடுமுறை கேட்டு கடிதம் எழுதிய மாணவர்கள் நாகையில் பரபரப்பு


அஜித் படத்திற்கு செல்ல விடுமுறை கேட்டு கடிதம் எழுதிய மாணவர்கள் நாகையில் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Aug 2019 10:30 PM GMT (Updated: 8 Aug 2019 6:51 PM GMT)

அஜித் படத்திற்கு செல்ல விடுமுறை கேட்டு கல்லூரி மாணவர்கள் எழுதிய கடிதத்தால் நாகையில், பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்,

நடிகர் அஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ என்ற திரைப்படம் நாகையில் உள்ள திரையரங்கில் வெளியானது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் வெளியாகியுள்ளதால் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் நாகையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 2 பேர், தங்களது துறைத்தலைவருக்கு தனித்தனியே நேற்று முன்தினம் விடுமுறை கேட்டு கடிதம் எழுதி இருந்தனர்.

அஜித் படத்துக்கு செல்ல...

இந்த விடுமுறை கடிதத்தை வாங்கி படித்து பார்த்த துறைத்தலைவர் அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அந்த கடிதத்தில் அஜித் நடித்து வெளியாகி உள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை காண செல்வதால் விடுமுறை தரும்படி கேட்டுக்கொண்டு இருந்தனர்.

பின்னர் அந்த மாணவர்களை துறைத்தலைவர் கண்டித்ததுடன் அவர்களின் பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரும்படி அதே கடிதத்தில் எழுதி மாணவர்களிடம் கொடுத்து அனுப்பினார். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக விடுமுறை எடுத்த நிலை மாறி இன்று சினிமாவுக்கு செல்வதற்கு விடுமுறை கடிதம் எழுதும் நிலைக்கு மாணவர்கள் சென்றிருப்பது வேதனையாக உள்ளது என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story