கணவரை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த நர்சு மர்மச்சாவு போலீசார் விசாரணை


கணவரை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த நர்சு மர்மச்சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 Aug 2019 10:15 PM GMT (Updated: 10 Aug 2019 7:20 PM GMT)

கணவரை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த நர்சு வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி மேலகல்கண்டார்கோட்டை கணேஷ் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ஆஜிதா (வயது 26). இவர் திருச்சி மாம்பழச்சாலை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். ஆஜிதா கடந்த சில வருடங்களுக்கு முன்பு நாகர்கோவிலை சேர்ந்த ஜெகன்பாபு என்பவரை திருமணம் செய்தார். இந்த நிலையில் திருமணமான ஓரிரு மாதங்களில் ஜெகன்பாபு திருச்சியில் ஜங்ஷனை அடுத்த முடுக்குப்பட்டி பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து ஜங்ஷன் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆஜிதா, திருமணத்திற்கு முன்பே ஒருவரை காதலித்து வந்தார். இதற்கிடையே ஜெகன்பாபுடன் ஆஜிதாவுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தான் ஜெகன்பாபுவை ஆஜிதா, தனது காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஆஜிதாவையும், அவரது காதலனையும் ரெயில்வே போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைதான ஆஜிதாவும், அவரது காதலனும் ஜாமீனில் வெளியே வந்தனர். ஆஜிதா திருச்சி பொன்மலைப்பட்டியில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

வீட்டிற்குள் பிணமாக கிடந்தார்

இந்த நிலையில் ஆஜிதா வீடு நேற்று நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து பொன்மலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை உடைந்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது ஆஜிதா வீட்டிற்குள் தரையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே சில மாத்திரைகள் சிதறி கிடந்தன. மேலும் ஒரு விஷ மருந்து பாட்டிலும் இருந்தது. மின்விசிறியில் சேலை தொங்கி கொண்டிருந்தது. அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயற்சித்து தோல்வியை தழுவியதால் விஷத்தை குடித்து இறந்தாரா? அல்லது மாத்திரைகளை அதிகமாக தின்று தற்கொலை செய்தாரா? அவர் எப்படி இறந்தார் என்பதை போலீசாரால் உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை.

போலீசார் விசாரணை

வீட்டில் பிணமாக கிடந்த ஆஜிதாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். கணவரை காதலனுடன் சேர்ந்து கொன்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த நர்சு மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story