மாத்தூர் அருகே பாலத்தில் கார் மோதி கவிழ்ந்ததில் 2 வாலிபர்கள் சாவு


மாத்தூர் அருகே பாலத்தில் கார் மோதி கவிழ்ந்ததில் 2 வாலிபர்கள் சாவு
x
தினத்தந்தி 11 Aug 2019 11:00 PM GMT (Updated: 11 Aug 2019 8:05 PM GMT)

மாத்தூர் அருகே பாலத்தில் கார் மோதி கவிழ்ந்ததில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

விராலிமலை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 35). இவரும், மதுரையை சேர்ந்த கார்த்திகேயன்(35), திருச்சியை சேர்ந்த சந்திரமோகன்(42) ஆகியோரும் நண்பர்கள். இதில் பாலகிருஷ்ணனின் உறவினர் வீட்டு திருமண அழைப்பிதழை காரைக்குடியில் உள்ள உறவினர்களுக்கு கொடுப்பதற்காக திருச்சியில் இருந்து நேற்று மாலை ஒரு காரில் அவர்கள் 3 பேரும் புறப்பட்டு சென்றனர்.

காரை பாலகிருஷ்ணன் ஓட்டினார். கார் நேற்று மாலை திருச்சி- புதுக்கோட்டை சாலையில் அண்ணா பல்கலைக்கழகம் அருகே செப்பிளாந்தோப்பு என்ற இடத்தில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள பாலத்தில் மோதி, சாலையின் நடுவே உருண்டு கவிழ்ந்தது. இதில் கார் உடைந்து அப்பளம் போல் நொறுங்கியது.

மேலும் காரில் சென்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலகிருஷ்ணன், கார்த்திகேயன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சந்திரமோகனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story