புகார்களை சட்டமன்ற மனுக்கள் குழுவிற்கு அனுப்பலாம் - கலெக்டர் தகவல்


புகார்களை சட்டமன்ற மனுக்கள் குழுவிற்கு அனுப்பலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 12 Aug 2019 10:45 PM GMT (Updated: 12 Aug 2019 10:00 PM GMT)

பொது பிரச்சினைகள், குறைகள் குறித்த புகார்களை சட்டமன்ற மனுக்கள் குழுவிற்கு அனுப்பலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சினைகளின் குறைகள், புகார்கள் குறித்து சட்டமன்ற மனுக்கள் குழுவுக்கு மனுக்களை கொடுக்கலாம். இந்த மனுக்களை தமிழில் மட்டும் அன்றைய தேதியுடன் கையொப்பமிட்டு 5 நகல்களுடன் தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, சென்னை 600009. என்ற முகவரிக்கு வருகிற 16-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொது பிரச்சினைகள் குறித்ததாகவும், ஒரேயொரு பிரச்சினையை உள்ளடக்கியதாகவும், துறையைச் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். மேலும் இந்த மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருத்தல் வேண்டும்.

தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கில் உள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கி கடன் அல்லது தொழில் கடன் வேண்டுதல், அரசு பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் போன்ற மனுக்களை அனுப்ப கூடாது. சட்டமன்ற பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும் போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும்.

ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும் குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டும் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும். அச்சமயம் மனுதாரர் முன்னிலையில் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும். இதுகுறித்து, மனுதாரர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Next Story