மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக்கோரி 5 ஒன்றியங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட அமைப்புக்குழு சார்பில் நடந்தது


மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக்கோரி 5 ஒன்றியங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட அமைப்புக்குழு சார்பில் நடந்தது
x
தினத்தந்தி 13 Aug 2019 11:00 PM GMT (Updated: 13 Aug 2019 6:59 PM GMT)

மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக்கோரி 5 ஒன்றியங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட அமைப்புக்குழு சார்பில் நடந்தது.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்று கடந்த ஒரு மாதமாக வணிகர் சங்கம், வக்கீல்கள் சங்கம், டாக்டர்கள் சங்கம், விவசாயிகள் சங்கம், சேவை சங்கங்கள், அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் மயிலாடுதுறை கோட்டத்திற்கு உட்பட்ட சீர்காழி, மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், கொள்ளிடம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகள், மயிலாடுதுறை, சீர்காழி நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அமைப்புகளும் இணைந்து மயிலாடுதுறை மாவட்ட அமைப்புக்குழு என்று ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற மயிலாடுதுறை மாவட்ட அமைப்புக்குழுவின் ஆலோசனை கூட்டத்தில், மேற்கண்ட 5 ஒன்றியங்களில் உள்ள 273 வருவாய் கிராமங்கள், 241 கிராம ஊராட்சிகள் ஆகியவற்றில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டது.

விழிப்புணர்வு பிரசாரம்

அதன்படி நேற்று மயிலாடுதுறையில் இருந்து 5 ஒன்றியங்களுக்கும் பிரசார பயணம் தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்ட அமைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேல், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆறுபாதி கல்யாணம், குரு.கோபிகணேசன், வணிகர் சங்க நிர்வாகிகள் மதியழகன், நவநீதன், ஸ்ரீராம், கண்ணன் உள்ளிட்டோர் 5 குழுக்களாக பிரிந்து மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், செம்பனார்கோவில், கொள்ளிடம் ஆகிய பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். அப்போது மயிலாடுதுறையை மாவட்டமாக ஏன் அறிவிக்க வேண்டும், புதிய மாவட்டம் அமைவதால் ஏழை-எளிய மக்கள் முதல் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் நன்மைகள், உள்கட்டமைப்பு வசதிகள், மேம்பாடு, அரசு ஆண்கள் கல்லூரி, மருத்துவக்கல்லூரி அமைதல், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு பெருக்கும் உள்ளிட்ட பலன்கள் குறித்து விளக்கி கூறப்பட்டுள்ளது. மேலும் சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டத்தில் மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Next Story