உத்திரமேரூரில் புதர் மண்டி கிடக்கும் குளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


உத்திரமேரூரில் புதர் மண்டி கிடக்கும் குளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 Aug 2019 9:45 PM GMT (Updated: 13 Aug 2019 7:53 PM GMT)

உத்திரமேரூரில் புதர் மண்டி கிடக்கும் குளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியில் சின்ன நாராசம் பேட்டை தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகில் அய்யனார்குளம் பகுதியில் 4 ஏக்கர் பரப்பளவில் குளம் இருந்தது. இந்த குளத்தில் தண்ணீர் தேங்கி இருந்ததால் சுமார் 15 தெருக்களில் உள்ள கிணறுகள் வற்றாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த குளத்தை உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் போனதால் பொதுக்கழிப்பிடமாகவும், கால்நடைகளின் கழிவுகளை கொட்டும் இடமாகவும் மாறியுள்ளது. புதர் மண்டி கிடக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த குளத்தை அருகிலுள்ள அரசு பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க பேரூராட்சியில் தீர்மானம் போட்டு ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் பள்ளி நிர்வாகம் இதுநாள் வரை பள்ளியின் பெயரில் பட்டா பெற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும் கூறுகின்றனர்.

இந்த குளத்தை ஆக்கிரமித்து வீட்டுமனைகளாக ஆக்கும் எண்ணத்துடன் பலரும் முயற்சி மேற்கொண்டு வருவதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கைகள் மேற்கொண்டு அந்த குளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story