அதிக லஞ்ச புகார்களை சந்திக்கின்றனர்: கிராம நிர்வாக அலுவலர்கள் சொத்து குவித்தால் கடும் நடவடிக்கை, கலெக்டர்களுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க மதுரை ஐகோர்ட்டு ஆணை
கிராம நிர்வாக அலுவலர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தால் கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து கலெக்டர்களுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு ஆணையிட்டுள்ளது.
மதுரை,
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்தவர் காளசுவரி. இவர் ஏற்கனவே திருமணமானவர். முதல் கணவரை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் அரசு ஊழியரான அம்பேத்கர் (இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்தவர்) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டவர்.
இந்த நிலையில் அம்பேத்கர் திடீரென இறந்துவிட்டார். இதையடுத்து கருணை வேலை கேட்டு காளசுவரி, அதிகாரிகளிடம் மனு அளித்தார். அவருக்கு கருணை வேலை வழங்க அம்பேத்கருக்கும், அவருடைய முதல் மனைவிக்கும் பிறந்த மகள் ஆட்சேபம் தெரிவித்தார். இதனால் காளசுவரி கருணை வேலை கேட்டு அளித்த மனு நிராகரிக்கப்பட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்து தனக்கு கருணை வேலை வழங்க உத்தரவிடக்கோரி காளசுவரி, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரர் தனது முதல் கணவரை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் அரசு ஊழியரை 2-வதாக திருமணம் செய்துள்ளார். ஆனால் முதல் கணவரும், தானும் விவாகரத்து செய்து கொள்வதாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தை பதிவு செய்து ஏ.லெட்சுமிபுரம் கிராம நிர்வாக அலுவலர் விவாகரத்து சான்றிதழ் வழங்கி உள்ளார். இதுபோன்ற சான்றிதழ் வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் கிடையாது.
இதில் இருந்து கிராம நிர்வாக அலுவலகங்களில் சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பாக தனி பதிவேடு பராமரிக்கப்படுவது இல்லை என தெரியவந்து உள்ளது. ஆனால் சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பாக தனி பதிவேடு பராமரிக்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்கள் அதிக அளவில் லஞ்சப்புகார்களை சந்திக்கின்றனர். பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வழங்குவது வரை கிராம நிர்வாக அலுவலர்கள் லஞ்சம் கேட்கின்றனர். அரசின் நலத்திட்டங்களை பெற போலியாக சான்றிதழ் வழங்குகின்றனர்.
தாசில்தார் அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொள்வது தொடர்பாக அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்களின் சொத்து விவரங்களை சரிபார்க்கவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தெரியவந்தால், அதை அவர்களின் பணிப்பதிவேட்டில் குறிப்பிடவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகளை தெரிவிக்கவும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அரசு உத்தரவிட வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களையும் தனி பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story