கும்மிடிப்பூண்டி அருகே 2 வீடுகளில் 50 பவுன் நகை திருட்டு


கும்மிடிப்பூண்டி அருகே 2 வீடுகளில் 50 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 14 Aug 2019 10:15 PM GMT (Updated: 14 Aug 2019 9:34 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே 2 வீடுகளில் 50 பவுன் நகை திருடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சாமிரெட்டிகண்டிகை கிராமத்தில் குடும்பத்தினரோடு வசித்து வருபவர் ராஜீவ் (வயது 34). இவர் கவரைப்பேட்டையை அடுத்த பண்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில், கடந்த 12-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு குடும்பத்தினருடன் ராஜீவ் சென்றிருந்தார். நேற்று காலை அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு தனியறையில் இருந்த பீரோவை சாவி போட்டு திறந்து அதில் இருந்த 35 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 3 பட்டு சேலைகள் மர்மநபர்களால் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதே பகுதியில் உள்ள விவசாயி சொக்கலிங்கம் (62) என்பவரும் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினரோடு சென்னை அம்பத்தூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று காலை வீடு திரும்பினார்.

அவரது வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது தனியறையில் இருந்த பீரோவை சாவி போட்டு திறந்து அதில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.2½ லட்சம் மர்மநபர்களால் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர். இந்த 2 சம்பவங்கள் குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்ம கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story